ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஜனவரி, 2011

முள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்

முன்பொரு காலமிருந்தது


ஈழத்தில் அழுத கண்ணீர்

இங்கே பெருக்கெடுத்து

தெருவெல்லாம் ஒடி 

தீயை உசுப்பிவிட்ட காலம்..
முன்பொரு காலமிருந்தது.
......

குப்பியணிந்த சிறுவர்கள்

ஒருகையில் துவக்கும்

மறுகையில் புல்லாங்குழலுமாய்

புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட காலம்
தமிழன் இல்லாத நாடில்லை

தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
முழக்கங்களின் கவர்ச்சியில்

மூழ்கிக் கிடந்த காலம்

முன்பொரு காலமிருந்தது
கேப்றன்,கேணல்

தேசியத் தலைவர் மாவீரர்

பட்டங்களே அடையாளமாய்

மாறிவிட்டிருந்த காலம்..

முன்பொரு காலமிருந்தது
செய்தியாளர் சந்திப்புக்கு

உலகமே திரண்டு வந்து

முண்டியடித்து நினற

அப்படியொரு காலமிருந்தது     .... ரவிக்குமார் எம்.எல்.ஏ.

1983 கருப்பு ஜூலை என் வாழ்நாளில் மறக்க முடியாத வடுவை ஏற்படுத்திச் சென்ற மாதம்.23வயசு எனக்கு.அதுவரை இலக்கியம்,திரைப்படம் என்று மட்டுமே இருந்த என்னைப் புரட்டிபோட்ட மாதம். என் தொப்புள் கொடி உறவுகள் கொலை செய்யப்பட்டு, பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு ,போராளிகளின் கண்கள் பிடுங்கப்பட்டு மிகக் கொடுமையான சிங்கள வன்முறைக்கு ஆளான நேரம்..அதுநாள்வரை இலங்கை வானொலி நிலையம், ஸ்ரீலங்கா டீத்தூள், ராணி சோப் என்று மட்டும் நான் அறிந்த இலங்கை எனக்கு வேறு முகம் காட்டிய மாதம்..
அன்றிலிருந்து மே 17,2009 -முள்ளிவாய்க்கால் பேரழிவு நடைபெற்ற தினம் வரை, என் உடல் , உணர்வு அனைத்திலும் நிரம்பி இருந்த ஒரு கருத்தாக்கம், தமிழீழம்.அன்றிலிருந்து என் வாழ்க்கை முறையையே, என் அன்றாட நிகழ்வுகளைக்கூட, தமிழீழம் நோக்கிய பயணத்திற்காகவே மாற்றி அமைத்துக் கொண்டேன்.

1992 வரை இந்தியாவில் நான் இருந்த காலம் வரை ஈழத்திற்காக எந்தவொரு போராட்டம் என்றாலும் நானும் இருப்பேன்..கட்சி சார்பற்று அனைத்து போராட்டங்களிலும் நான் இருந்தேன்..நான் தி.மு.க சார்பு உள்ளவன் என்று என்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் எம்.ஜி.ஆர் என்ற மாமனிதரை நான் மதிக்க கற்றுக்கொடுத்தது ஈழப் போராட்டம் தான்..தமிழக அரசியலில் என்னால் அறவே வெறுக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஈழப்போராட்ட ஆதரவு காரணமாக என்னால் அதிகம் கவரப்பட்டார்.. அந்த அளவுக்கு ஈழம் கிடைக்குமென்றால் எந்த சமரமும் செய்து கொள்ளலாம் என்று எனக்குப் பட்டது..
1987 செப்டம்பர் 26 . என் பாசத்துக்குரிய தோழர் தியாகி திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த அன்று சொல்ல முடியாத சோகத்துடன், வீட்டை விட்டு வெளியில் செல்ல மனமில்லாமல் இருந்த பொழுதுதான், மருத்துவமனை சென்றிருந்த என் மனைவி, தான் முதல் முதலாக கருவுற்ற செய்தி கொண்டு வந்து சந்தோசத்தில் என் முன்னர் நின்றார்..அப்பொழுது நான் என் மனைவியிடம் சொன்னது..ஆண் குழநதை என்றால் திலீபன் என்று பெயரிடுவோம்.. தமிழீழம் என்ற எனது வேட்கையை அணைக்காமல் இருக்க என் வீட்டுலேயே திலீபன் வளரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அநதப்பெயரை என் குடும்ப உறுப்பினர்களின் பலத்த எதிர்ப்புகளோடு , அதே சமயம் மனைவியின் ஆதரவோடு என் மூத்த மகனுக்கு திலீபன் என்ற பெயர் வைத்தேன்..
தமிழீழம் என்பதை ஈழவிடுதலையாக மட்டும் நான் பார்க்கவில்லை..நாடான்ற தமிழனுக்கு ஒரு நாடு வேண்டும் என்பது இன்றும் என்றும் எனது ஒரே கனவு.ஒரே பேராசையும் கூட..
28 வருஷம் சுமந்த கனவு..
விடுதலைப்புலிகளின் மேல் எனக்கும் விமர்சனங்கள் உண்டு..இருந்தாலும் களத்தில் நின்றவர்கள் அவர்கள் மட்டுமே. கடைசிவரை மரபு வழிப் போரில் இருந்து கொரில்லாப் போருக்குத் திரும்பாமல், உயிர் போகும் வரை களத்தில் நின்றவர்கள் எம் விடுதலைப் போராளிகள். அவர்களுக்கு வீர வணக்கம்..

விடுதலைப் போராளிகள் தான் மரபு வழிப்போரில் இருந்தார்களே தவிர, இந்திய அரசு பின்னனியில் இருந்து நடத்திய இந்தப் போரில் சிங்கள ராணுவத்தால் அனைத்து மனித உரிமைகளும் மீறப்பட்டன.2008 ஆண்டு பின் பகுதியிலிருந்து 2009 மே18 வரை நடந்த அனைத்து அத்துமீறல்களும் ”யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள்” (யு.டி.எச்.ஆர்)என்ற அமைப்பால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.முடிந்தால் பார்க்கவும் நெஞ்சு வெடித்துவிடும்.
2008 அக்டோபர் முதற்கொண்டு தொடர்ந்து, வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் என்று தமிழகம் முழுதும் போராட்டங்கள் பலவழிகளில் தொடர்ந்தும் , அதன் உச்சகட்ட நிகழ்வாக தியாகி முத்துக்குமரன், தன்னைத் தானே தீ வைத்துக் கொண்டும் அதன்பிறகு 16 உயிர்கள் தீக்கிரையாகியும் , ஒண்டுக்குடித்தனத்தில் வாழும் தாய்த் தமிழர்களாகிய நம்மால் ஒன்றும் செய்ய முடியாத வேதனை, நம் கையாலாகத்தனம், என்னை என் சாவு வரைத் துரத்தும்.

கடைசிவரை 6 கோடித்தமிழர்களின் கூக்குரலுக்கும், போராட்டங்களுக்கும், தீக்குளிப்புக்கும் செவிசாய்க்காமல் இந்திய அரசு நடத்திய இந்த இன அழிப்பு மனதால் கூட மன்னிக்க முடியாதது..தரை,வான்,கடல் என் முப்படைகளும் இருக்க, வங்கி,அஞ்சல்,மருத்துவம் என அனைத்துச் சேவைகளுடன் நடைபெற்ற ஒரு தமிழ் அரசை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்திய காங்கிரஸை என் ஏழேழு ஜென்மத்திலும்(அப்படி ஒன்று இருந்தால்) மறக்கவோ மன்னிக்கவோ முடியாது. காதுகளை மறைத்துக் கொண்டு தலைப்பாகையுடன் தமிழக எம்.பிக்கள் முன் மன்மோகன் அமர்ந்திருக்கும் புகைப்படம் எனக்கு சொல்லும் சேதி நம் குறைகள் எதையுமே காதில் வாங்கக்கூடாது என்பதாகத் தான் எனக்குப்பட்டது.நமது அழுத்தத்தினால் இலங்கை சென்ற அந்நாள் வெளியுறவு அமைச்சர் பிரணாப், அங்கு சென்று போரில் எவ்வளவு தூரம் இலங்கை ராணுவம் வெற்றி பெற்றது என்று கேட்டு, அதற்கு தேவையான உதவிகளைச் செய்வதாக வாக்கு கொடுத்து வந்தது முழுக்க முழுக்க நம்பிக்கைத் துரோகம்.
இதற்கு சோனியா தலைமையிலான காங்கிரஸ்தான் முழுக்காரணம் என்றாலும், உண்மையான காரணம் இந்திய வெளியுறவுத்துறையே.. என்னதான் இந்தியா ஒரு தேசம், ஒருமைப்பாடு என் உயிர் என்றெல்லாம் தமிழர்கள் ஒன்றிணைந்தாலும், மலையாளிகளுக்கு என்னமோ அதல்லாம் ஒரு பொருட்டே இல்லை.
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு இங்கிலாந்திற்கு முதல் இந்தியத்தூதுவராகப் பணியாற்றியவரும் அதன் பின்பு ஐ.நாவிற்க்கான இந்தியக்குழுவிற்கு தலைமை வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுப்பதில் முன்னின்றவர்.. அவர் காலத்தில் வெளியுறவுத் துறையில் நுழைந்த மலையாளிகள்,அந்தத் துறையையே, ஏதோ கேரள அரசின் ஒரு பகுதியாகத் தான் இன்று வரை பார்க்கிறார்கள். இந்திய வெளியுறவுத்துறையை இந்திய மலையாளிகள் துறை என்று பெயர் மாற்றம் செய்யலாம். ஐ,நாவில் இருந்த சசி தரூர், இன்றும் உள்ள விஜய் நம்பியார், எம்.பி.நாராயணன்.. சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலராக இன்று இருக்கும் நிரூபமா அனவருமே மலையாளிகள்.. இவர்களுடன் பாதுகாப்பு அமைச்சரான ஏ.கே.அந்தோனி ஆகியவர்கள் ராஜபக்‌ஷேவுடன் இணைந்து நடத்தியது தான் இந்த இன அழிப்புப் போர்.. இந்திய இறையாண்மை, இந்திய அரசின் பாதுகாப்பு என்று பல்வேறு காரணங்கள் சொல்லி முதலில் இந்திய உளவுத்துறை”ரா” வால் விடுதலைப் புலிகளை முடிக்கப் பார்த்த இவர்கள் இன்று, ராஜீவை இழந்த சோனியா,ராகுல் காலத்தில் தான் இதை நடத்தி முடிக்க முடியுமென்று திட்டமிட்டு முடித்தது இந்த மலையாளிக் கூட்டணிதான்.இதற்கு இங்குள்ள ராஜபக்‌ஷேவின் தூதுவர் இந்து ராம் ,சோ, சுப்பிரமணியசாமி போன்றவர்கள் துணை..
தமிழகத்தில் இருந்து அமைச்சர் பதவி கேட்போர், பணம் பண்ணும் துறைகளையே கேட்டுப்பெறாமல், உண்மையிலேயே உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றால், முதலில் கேட்டுப் பெறவேண்டியது இந்த வெளியுறவுத் துறையே. வெளியுறவுத்துறை கைக்கு வந்தாலும் உடனடியாக மாற்றம் கொண்டு வரமுடியாது. துறை முழுதும் களை எடுக்கப் பட வேண்டும். உண்மையான இந்திய பாதுகாப்பு எது என்று தெரியப்படுத்த வேண்டும். கிருஷ்ண மேனன் காலத்திலேயே அவரது தவறான கணிப்பால் தான் சீனா நம்மீது படை எடுத்தது. அந்தத் துறையின் தவறான போக்கால் தான் இந்தியாவின் நாலு பக்கமும் பாதுகாப்பு பலவீனப்பட்டு உள்ளது. இதுவரை பாதுகாப்பாக இருந்த தென்னிந்தியாவின் பாதுகாப்பையும் இப்போது கேள்விக்குரியதாக்கி இருக்கிறார்கள்.

வெளியுறவுத்துறையை கேட்டுப் பெற்று தேவையான மாற்றங்கள் செய்தால் தான் தமிழர்களுக்கு மட்டுமல்ல.. அனைத்து இந்தியர்களுக்கும் அது தான் பாதுகாப்பு. இந்தியாவிற்கும் பாதுகாப்பு.

அப்பொழுதுதான் உலகமெங்கும் வாழ் தமிழர்களுக்கு மட்டுமில்லை.. தினந்தோறும் பிழைக்கப்போய் குண்டடிபட்டு வந்து நிற்கும் என் சொந்த மண்ணைச்சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் உயிருக்கும் அது தான் பாதுகாப்பு..

அதுநாள்வரை உலகத்தமிழர்களுக்கும் மட்டுமல்ல..என் மீனவத் தோழர்களுக்கும் நாதியில்லை என்பது தான் உண்மை.

அன்புடன்

அ.வெற்றிவேல்

வியாழன், 6 ஜனவரி, 2011

மீண்டு வந்தார்கள் விடுதலைப்புலிகள்

உண்மை தான், மீண்டு வந்து விட்டார்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். தனது சாம்பலிலிருந்து மீண்டு வருமாம் பீனிக்சு பறவை, புலிகளும் அதே போல தனது சாம்பலிலிருந்து மீண்டு வந்திருப்பார்கள் என  நினைக்கின்றேன். சொல்வ‌‌து நானாக இருந்தால் உங்களுக்கு ஐயம் எழுவது இயற்கை. ஆனால் இதைச் சொன்ன‌‌து இந்திய உளவுத்துறை. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இது தான் உண்மை.
புலிகள் இந்தியாவின் தெற்கு கடலோர பகுதி வழியாக அண்மையில் ஊடுருவி தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றார்கள். ச‌ன‌வ‌ரி மாத‌ம் த‌மிழ‌க‌ம் வ‌ரும் இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் ம‌ன்மோக‌ன் சிங்கையும், இந்திய உள் துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள், மேலும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர். க‌ருணாநிதியையும் அவ‌ர்க‌ள் குறிவைத்துள்ளார்க‌ள் என‌ இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழ்நாட்டின் மாநில காவல்துறைத் தலைவர். இல‌த்திகா ச‌ர‌ண் அவ‌ர்க‌ள் (இவ‌ர் முத‌லில் இந்த‌ ப‌த‌விக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டதும், அதன் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்ததும் அதில் அரசு இவருக்கு ஆதரவாக பேசியதும் வாசகர்கள் எல்லோருக்கும் தெரியும், அதனால் இவர் அரசின் சார்பாக பேசுகின்றார் என வாசகர்கள் நினைப்பதை நான் தடுக்க முடியாது, ஏன் என்னால் தடுக்க முடியாது என்பதை நான்காவது பத்தியில் விரிவாக கூறியுள்ளேன்). மேலும் அந்த‌ அறிக்கையில் இந்த‌ த‌க‌வ‌லை வ‌ழ‌ங்கிய‌து இந்திய‌ உள‌வு துறை(IB) என்றும் அவ‌ர் கூறியுள்ளார்.(1)

இது இன்று வ‌ந்த‌ செய்தி, இப்பொழுது நாம் நேற்று வ‌ந்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ஏனென்றால் வ‌ர‌லாறு என்ப‌து நேற்றைய‌ நிக‌ழ்வுக‌ளின் தொட‌ர்ச்சி என‌ என் ந‌ண்ப‌ர். செந்தில் அடிக்க‌டி கூறுவார். நேற்றைய‌ச் செய்தி இந்தியாவில் விடுத‌லைப் புலிக‌ள் மீதான‌ த‌டையை நீக்க‌வேண்டும் என்று சென்னை உச்ச‌நீதிம‌ன்ற‌த்தில் வ‌ழ‌க்கு ப‌திவு செய்துள்ளார் மதிமுக தலைவர். வைகோ அவர்கள். இதில் அர‌சு த‌ன‌து ப‌திலை அளிக்க‌ வேண்டுமென‌ நீதிப‌தி நேற்று உத்த‌ர‌விட்டுள்ளார்.(2)
ஒருவேளை புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பதிவு செய்யப்பட்ட‌ வழக்கில் அர‌சு த‌ர‌ப்பு தனது பிரதிவாதத்தை அளிக்க வேண்டும் என நேற்று சொன்ன‌தால் இன்று இப்படி ஒரு அறிக்கை வந்திருக்கலாமோ என வாசகர்களாகிய நீங்கள் எண்ணுவதை நான் தடுக்க முடியாது, ஏனென்றால் இந்தியா ஒரு மக்களாட்சி நாடு, ஒவ்வொரு குடிமகனுக்கும் “பேச்சுரிமை”, “எழுத்துரிமை”, “தாமாக சிந்திக்கும் உரிமை” உண்டு என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். ஏற்கனவே கடந்த சூன் 12,2010 அன்று நடைபெற்ற விழுப்புரம் தண்டவாள குண்டுவெடிப்பை விடுதலைப் புலிகள் செய்திருக்கலாம் என‌ இதே தமிழக காவல்துறை வழக்கைப் பதிந்து இன்னும் துப்பு(?) துலக்குவது தாங்கள் எல்லோரும் அறிந்ததே.  அதற்குள்ளாக விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது தமிழக காவல் துறை.  இந்த குற்றச்சாட்டிற்கு நீங்கள் ஆதாரம் எல்லாம் கேட்கக்கூடாது,  அப்படி கேட்டாலும் கிடைக்காது.   ஏனென்றால் இது இந்தியாவின் பாதுகாப்புத் தொடர்பானது,  சட்டப்படி இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை வெளியிடுவது தவறு என தமிழக காவல் துறை கூறும்,  ஒரு வேளை உண்மையான தகவல் உங்களுக்கு கிடைத்தாலும் நீங்களும் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால் உங்கள் மீது தேச துரோக வழக்கு பாயும்.  

நன்றி : ந‌ற்ற‌மிழ‌ன்.

புதன், 16 டிசம்பர், 2009

‘அரக்கன் வந்தான்… ஆரம்பித்தது அழிவு!’


‘அரக்கன் வந்தான்… ஆந்திரத்தில் பேரழிவு தொடங்கிவிட்டது!’ – வைணவத் துறவியின் வாக்கு

ராஜபக்சே இரண்டு முறை திருப்பதி வந்தார். அவர் கால்பட்டதால்தான் ஆந்திராவுக்கே அழிவுகாலம் வந்துவிட்டது என வைணவ துறவி ஒருவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தன் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட விரும்பாத அந்தத் துறவி மேலும் கூறுகையில், ராஜபக்சே ஒரு மனித அரக்கன். பஞ்சமா பாதகங்களைச் செய்துவிட்டு ஒன்றும் தெரியஆதவர் போல் நடிக்கிறார்.

உலகின் கொடும் அரக்கன் என்றால் சந்தேகமில்லாமல் இந்த ராஜபக்சேதான்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் ராஜபக்சே! இந்த அரக்கனுக்கு உதவி செய்தவை இந்திய பார்ப்பனியமும், அமெரிக்க மற்றும் சீன அரசுகளும்தான்.

இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார் ராஜபக்சே.

இலங்கையில் இறுதி யுத்தம் நடந்தபோது அவர் முதல் முறை திருப்பதி வந்தார். அப்போது, மக்கள் தலைவராகத் திகழ்ந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனார்.

இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் இந்த கொடுங்கோலன். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலமே.

ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டம் நடந்தது கிடையாது. தெய்வம் நின்றல்ல… அன்றே கொல்லும் வலிமை படைத்தது. ராஜபக்சேவை கோயிலுக்குள் நுழையாதே என்று தெய்வம் சொல்லவில்லை… ஆனால் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளித்து உள்ளே அமர வைத்த ஆந்திரத்தை தண்டிக்கிறது இன்று. இந்த தெய்வத்தின் உண்மையான பக்தர்கள் லட்சக்கணக்கில், வரிசையில் காத்திருக்க, சம்பந்தமே இல்லாத இந்த அரக்கனை முதல் மரியாதை தந்து சந்நிதானத்தில் அமர வைத்த கொடுமையை தெய்வம் எப்படிப் பொறுக்கும். இதைச் செய்த அந்த பூசாரிகளுக்கும் அழிவுகாலம் காத்திருக்கிறது.

தமிழர்களின் எல்லை தெய்வம் திருப்பதி ஏழுமலையான். தன் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளை திருப்பதி ஏழுமலையானாலேயே பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதற்கு எதிர்வினை காட்டுகிறார் இன்று.

இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள்? இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது.

ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை. இன்னும் என்னென்ன நடக்குமோ.

எனவே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மஹத்தி தோஷம் பீடித்த ராஜபக்‌ஷே நுழைந்ததால் ஏற்பட்ட தீட்டைக் கழிக்க தக்க பரிகார பூஜைகள் யாகங்கள் நடத்தப்பட வேண்டும். இல்லை என்றால் ஆந்திர தேசத்திற்கும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய அவலமும் அழிவும் ஏற்படும்.

எனவே உண்மையான வைணவர்களும், ஏழுமலையான பக்தர்களும் துரிதமாக செயற்பட்டு திருப்பதி கோவிலில் தீட்டுக் கழிக்கும் பரிகார நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்… அதுமட்டுமல்ல, பாதிக்கப்பட்ட தமிழினத்துக்கும் உரிய பரிகாரத்தை இலங்கை செய்ய வேண்டும். அதற்கு ஏற்ப இந்தியா இனியாவது செயல்பட வேண்டும்” என அந்த வைணவத் துறவி கேட்டுக்கொண்டார்.

இந்தத் துறவியின் கூற்றில் பகுத்தறிவு உள்ளதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்கட்டும்… திருவிழா, பண்டிகை போன்றவற்றை நாம் கொண்டாடுவதே கூட, அதன் பெயரால் சில நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்ற நோக்கில்தான் என்பார்கள் பெரியவர்கள். கடவுளின் மீதுள்ள பயமாவது ராஜபக்ச மற்றும் இந்திய ஆட்சியாளர்களின் மனதை மாற்றுமா? அல்லது கடவுளையே இவர்கள் மாற்றிவிடுவார்களா? பார்க்கலாம்!

மற்றபடி தனக்கு சாதகமான விஷயங்களை எங்கிருந்து வந்தாலும் ஏற்கும் பாமர மனநிலையிலேயே இதை எடுத்துக் கொள்ளவும்!

நன்றி : என்வழி 

பிரபாகரன் மகள் சித்திரவதை செய்து படுகொலை?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவின் உடல் எனக் கூறி சில படங்கள் வெளியாகியுள்ளன. நிர்வாண கோலத்தி்ல உடல் உள்ளதால் அவர் பாலியல் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


ஈழப் போரின் கடைசி கட்டத்தில் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் ராணுவத்திடம் சரணடைந்தனர். சில வெளி சக்திகளின் அறிவுரையின் பேரில், கேபி உள்ளிட்டோரின் அறிவுறுத்தலின் பேரில் இவர்கள் சரணடைந்தனர். அவர்களில் துவாரகாவும் ஒருவர் எனத் தெரிகிறது.

இந் நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இது பிரபாகரனின் மகள்தானா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

ஆனால் இந்தப் பெண்ணின் உடல் கடும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டது போலத் தெரிகிறது. நிர்வாண கோலத்தில் உடல் உள்ளது. எனவே ராணுவத்தினரால் பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் அந்தோணியின் மரணம் மட்டுமே புலிகள் இயக்கத்தினரால் உறுதி செய்ய்பட்டுள்ளது. பிரபாகரன் [^], அவரது மனைவி மதிவதனி, இளைய மகன் பாலச்சந்திரன், துவாரகா ஆகியோர் குறித்து தெளிவான தகவல்கள் யாரிடமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு பாலச்சந்திரனின் உடல் என்று கூறி சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில் துவாரகாவின் உடல் என்று கூறி சில படங்கள் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை ராணுவத்தினர் எந்த அளவுக்குக் கொடூரமாக, ஐ.நா. போர் நிறுத்த ஜெனீவா உடன்படிக்கையை மீறி வெறித்தனமாக நடந்து கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுவதற்காக இந்தப் படங்கள் வெளியாகியுள்ளதாக ஈழத் தமிழர் இணையங்கள் கூறியுள்ளன.

சரணடைய வந்த புலிகள் தலைவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சே உத்தரவிட்டார் என்று சில தினங்களுக்கு முன்பு பொன்சேகா கூறியிருந்தார். ஆனால் சிங்களர்கள் மத்தியில், நம்மைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்று கொதிப்பு கிளம்பியதால் நான் அப்படிச் சொல்லவில்லை என்று அவர் மறுத்தார் என்பது நினைவிருக்கலாம்.

கொல்லப்பட்ட இந்தப் பெண் துவாரகாவோ இல்லையோ, ஒரு பெண் மிகக் கொடூரமான பாலியல் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்ட்டிருக்கிறார். அதைச் செய்தது இலங்கை ராணுவம் என்ற உண்மை மட்டுமே இப்போதைக்கு தெளிவாகத் தெரியும் உண்மையாகும்.

நன்றி : தட்ஸ்தமிழ்