செவ்வாய், 7 டிசம்பர், 2010

அரங்கநாதரையும் வரலட்சுமியையும் இப்படியா அவமானப்படுத்துவது? – கமலுக்கு கண்டனம்

சினிமா பாடலில் அரங்கநாத சுவாமியையும், வரலட்சுமி தேவியையும் கேவலப்படுத்தி எழுதியுள்ளார் கமல் என கண்டனக் குரல் எழுந்துள்ளது.

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் மிகவும் அறுவறுக்கத்தக்கதாகவும் ஆபாசமாகவும் உள்ளதாகவும், இதில் அரங்கநாதர் மற்றும் வரலட்சும் ஆகிய தெய்வங்களை தேவையின்றி இழிவுபடுத்துவதாகவம் கூறி, இந்து மக்கள் கட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி, இயக்குனர் ரவிக்குமார், ஹீரோ கமல்ஹாஸன், நடிகை த்ரிஷா மற்றும் இசையமைப்பாளருக்குஇந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணன்.

அந்த நோட்டீஸில் இப்படிக் குறிப்பிட்டுள்ளனர்:

மன்மதன் அம்பு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள கண்ணோடு கண்ணை கலந்தால் என்றால் என்ற பாடல், இந்து சமயத்தை வழிபடுபவர்களையும், கோடி கணக்கான இந்து சமயத்தை சார்ந்தவர்களையும், இந்து சமயத்தை பின்பற்றுபவர்களையும் மனவருத்தம் அடையச் செய்துள்ளது.

நமது நாட்டின் சட்டங்களையும், மதஉணர்வுகளையும் புண்படுத்த கூடாது என்ற நோக்கில் இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. அரசியல் அமைப்பு சட்டம் கொடுத்துள்ள கருத்து, எந்த பிரிவு மக்களிடையேயும் வேறுபாட்டையும், சகிப்பு தன்மைக்கு ஊறு நிகழா வண்ணம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றது.

இந்த பாடலில் இடம்பெற்றுள்ள அரங்கநாதர் மற்றும் ஸ்ரீவரலட்சுமி குறித்த வரிகள் இந்து மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. எனவே மேற்படி பாடல் ஒலி,ஒளி எந்தவடிவத்திலும் படத்தில் இடம்பெறக்கூடாது. அதனை மீறி செயல்படும் பட்சத்தில், சட்டப்போரைச் சந்திக்க வேண்டி வரும்”, என்று கூறியுள்ளார்.

நன்றி : நெருடல் இணையம்