வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர்

இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர்.

ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா.

அவரது இந்தப் பேச்சு ஈழ ஆதரவு இயக்குநர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. முன்பு சீமான், அமீர் இருவரும் கைதானபோது, அவர்களை மீட்க மொத்தத் திரைத் துறையும் போராடியது. ஆனால், இப்போது கைதாகி இருக்கும் சீமானுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பக்கூட திரைத் துறை தயாராக இல்லை. இப்படியொரு நிலையில் சீமானுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் பாரதிராஜா பேசி இருப்பது, திரைத் துறைக்குள் பெரும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

ஏற்கெனவே சீமானோடு கைதானவரும், இயக்குநர்கள் சங்க இணைச் செயலாளருமான இயக்குநர் அமீர் இதுகுறித்து 'ஜூனியர் விகடனுக்கு' அளித்துள்ள பேட்டி:

ஈழப் போர் நடந்த நேரத்தில் ஆர்ப்பாட்டம், உண்ணா விரதம் என பெரிய அளவில் போராடிய திரைத் துறை, இப்போது ஈழ விவகாரத்தையே அடியோடு மறந்துவிட்டதே?

''போர் நிறுத்தப்பட வேண்டும். ஈழ மக்களும் போராளித் தலைவர் பிரபாகரனும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் உணர்வுப் போராட்டமாக இருந்தது. எத்தனையோ விதமான போராட்டங்களை நடத்தியும்,
முத்துக்குமார் போன்ற வாழைக் குருத்துகளை வாரிக் கொடுத்தும், நம்மால் போரைத் தடுக்க முடியவில்லை. உலகமே வேடிக்கை பார்க்க... ஈழமே இழவுக் காடாகிவிட்டது.

புலிகள் இயக்கம் இதுவரை காணாத வீழ்ச்சியை அடைந்துவிட்டது. புலித் தலைவரின் முகத்தைப் போன்ற பிரேதத்தைக் காட்டி, எழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் மனதை சிங்களச் சதி வீழ்த்திவிட்டது.

திரைத் துறையினரும் மக்களின் ஓர் அங்கம்தான். ஈழத்தின் வீழ்ச்சிதான் திரையுலகினரை அடியோடு முடக்கிப் போட்டதே தவிர, ஈழ உணர்வு இற்றுப் போய்விட்டதாகச் சொல்ல முடியாது.

சுதந்திரத்துக்காகப் போராடிய தமிழ் மக்களை சோற்றுக்காகப் போராடவைத்து, இனி தனி ஈழ எண்ணமே அவர்களுக்கு எழாதபடி சிங்கள அரசு செய்துவிட்டது.

முள்வேலிக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு விடிவு பிறக்கச் செய்ய இங்கே பெரிதான போராட்டங்கள் இல்லை. ஒருமித்த கைகோர்ப்பும் இல்லை. 'இனி ஈழ விடிவுக்கு வழியே இல்லை' என மக்களுக்குள் உண்டாகி இருக்கும் இயலாமையும் சோகமும் அவர்களை அமைதியாக்கிவிட்டது. அவர்களை மீண்டும் உசுப்ப... இங்கே யாரும் இல்லை!''

ஆரம்பத்தில் ஈழ விவகாரத்துக்காக சீமானோடு ஜெயிலுக்குப் போனவர் நீங்கள். 'நாம் தமிழர்' இயக்கத்தை தொடங்கி சீமான் இன்று வரை போராடிவரும் நிலையில், உங்களைப் போன்றவர்கள் அப்படியே அமைதியாகிவிட்டீர்களே? அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களை அந்த அளவுக்குப் பயமுறுத்தி இருக்கிறதா?

''ஈழ விவகாரத்துக்காகத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த ராமேஸ்வரம் [^] பேரணியில் கலந்துகொண்டு நான் பேசினேன். அதேபோல் முதல்வர், துணை முதல்வர் நடத்திய மனிதச் சங்கிலி ஊர்வலத்திலும் முதல் ஆளாகக் கலந்து கொண்டேன். போராட்டங்களை என் தலைமையில் நடத்துகிற அளவுக்கோ, பெரும் கூட்டத்தைத் திரட்டுகிற அளவுக்கோ எனக்கு சக்தி இல்லை. ஈழத்துக்காக தனி இயக்கம் தொடங்கி நடத்துவதற்கான தகுதி என்னிடம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். சுய பரிசோதனை இல்லாமல் 'நானும் களத்தில்' எனச் சொல்லி என்னால் நாடகமாட முடியாது.

தனி இயக்கம் தொடங்கி நடத்துகிற வல்லமையும் ஆற்றலும் தனக்கு இருப்பதாக சீமான் நினைக்கிறார். அதற்காகப் போராடுகிறார். ஆனால், என்னால் முடிந்தது ஆக்கபூர்வப் போராட்டங்களுக்கு தனிப்பட்ட எனது பங்களிப்பைச் செய்வது மட்டுமே. நாளைக்கே முள்வேலி மக்களுக்காக ஒரு போராட்டத்தை யாராவது நடத்தட்டும். அதில் அழையாத ஆளாக நான் பங்கேற்கத் தயாராக இருக்கிறேன். மற்றபடி, அரசுத் தரப்பில் இருந்து எனக்கு எவ்வித மிரட்டலும் இல்லை. எத்தகைய மிரட்டலுக்கும் நான் அஞ்சுகிற ஆளும் இல்லை!''

சீமானின் போராட்டம் [^] அரசியல் சார்ந்தது. அவருடைய கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பாரதிராஜா சொல்லி இருக்கிறாரே?

''ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒவ்வொரு தலைவர் உருவெடுப்பார். இதுதான் வரலாறு. அதில் தவிர்க்க முடியாத சக்தியாக ஈழ எழுச்சிக்கு என இப்போது சிலர் உருவெடுக்கிறார்கள். கைக்கெட்டும் தூரத்தில் ரத்த உறவுகள் தத்தளிக்கும் நிலையை எண்ணி எல்லோருடைய ஈரக் குலையும் துடிக்கத்தான் செய்கிறது.

ஆனால், எல்லோராலும் வீதிக்கு வர முடியவில்லை. செவிகளைக் கிழிக்கும் அளவுக்கு முழங்கி, தார்க் குச்சி போட்டு தமிழர்களைத் தயார்படுத்துகிற வேகம் சீமானிடம் தெரிகிறது. அதற்குக் கைகொடுக்காவிட்டாலும், அவரைக் காயப்படுத்தாமல் இருப்பதுதான் இப்போது அவசியமானது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து முழங்கியதால்தானே சீமான் சிறைக்குப் போனார்! இதே முழக்கத்தைத்தானே கடிதம் வாயிலாக தமிழக முதல்வரும் மத்திய அரசு [^]க்கு உரைக்கிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் [^] இதற்காகத்தானே இலங்கை தூதரகத்தையே பூட்டுவோம் என்கிறார். அப்பாவி மீனவர்கள் கொல்லப்படக் கூடாது என்கிற ஒரே நோக்கம்தான் எல்லோருக்கும். அதன் வார்த்தை வடிவங்கள்தான் வேறு. இதில் சீமானுக்கு மட்டும் எங்கே இருந்து அரசியல் வந்தது? அப்படியே அரசியலாக இருந்தாலும் அதற்கான விதையைப் போட்டது பாரதிராஜாதானே! அவரைப் பார்த்தும், அவருடைய ஆதங்கப் பேச்சைக் கேட்டும்தானே ஈழ உணர்வு எங்களுக்குள் வந்தது.

ஈழப் போர் தடுக்கப்படாததைக் கண்டித்து மத்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ பட்டத்தைத் தூக்கி வீசி தமிழனின் கோபம் எப்படிப்பட்டது என்பதை நிரூபித்த பாரதிராஜா, சீமான் கைது குறித்து இப்படிச் சொல்லலாமா?

பத்மஸ்ரீ பட்டத்தை வீசியதைக் காட்டிலும், மீனவர்களுக்காகக் குரல் கொடுத்தது ஆவேச மிகுதியா? கோபத்தையும் கொந்தளிப்பையும் கற்றுக்கொடுத்த பாரதிராஜா, இன்று எதற்காக இப்படி ஒரு வாதத்தை வைக்கிறார்? சீமான் கைது குறித்து அவர் உதிர்த்த வார்த்தைகளால் இணைய தளங்களில் 'பாரதிராஜாவா பசில் ராஜாவா?' என விவாதமே நடத்துகிறார்கள். உங்களைப் பின்பற்றி வளர்ந்தவர்களான நாங்கள் அதையெல்லாம் வெறுமனே வேடிக்கை பார்க்கக் கூடிய சூழலில் இருக்கிறோம்!''

உங்களின் 'யோகி' பட பாடல் கேசட் வெளியீட்டு விழாவில், 'இனி ஒரு வருடத்துக்கு எந்த விழா விலும் பேச மாட்டேன். ஈழத் துக்கத்துக்காகமௌனம் காக்கப்போகிறேன்' எனச் சொன்ன பாரதிராஜா முதல்வர் கலந்துகொண்ட விழாவில் அவரை வானளாவப்புகழ்ந்தாரே?

''இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்கிறார்கள். மாபெரும் கலைஞராக, தமிழ் மண்ணை உரித்துக் காட்டிய படைப்பாளராக பாரதிராஜாவை மனதுக்குள் பூஜிக்கிறவர்கள்தான் நாங்கள். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் 'திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு' அமைத்து விவாதித்தபோது, அங்கே இருந்தவர் பாரதிராஜா! அங்கே அ.தி.மு.க-வுக்கு ஆதரவாக திரைத் துறையினர் பிரசாரம் செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டது. உடனே நான் எழுந்து, 'நாம் கட்சி நடத்தவில்லை. ஓட்டு கேட்பது நம் வேலையும் இல்லை' எனச் சொன்னேன். அவர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களையும் தவிர்த்தேன். அன்றைக்கு அ.தி.மு.க. வெற்றிக்கு வித்திடும்விதமாக திரையுலகத் தமிழீழ ஆதரவுக் குழு போராடியதை பாரதிராஜா தடுத்திருக்கலாமே? ஏன் அதை பாரதிராஜா செய்யவில்லை?

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்' என அன்று கோஷம் எழுப்பிய சீமானுக்கு ஈழ அரசியல் குறித்து பாரதிராஜா எடுத்துச் சொல்லி இருக்கலாமே? அன்று பாரதிராஜா ஏன் அதைச் செய்யவில்லை? அப்படிப்பட்ட அவர் இப்போது மனம்மாறி வேறு விதமாகப் பேசுகிறார்.

அப்போது 'இலை'க்காக சீமான் பேசியது அரசியல் சார்பற்ற ஒரு நடவடிக்கை என்றால், இப்போது 'ஈழம்' பற்றி பேசிவிட்டு சிறைக்குப் போயிருப்பது எப்படி அவருடைய கட்சி சார்ந்த நடவடிக்கையாக மட்டுமே இருக்க முடியும்? 'இலை'க்காக வலம்வந்த சீமானின் நடவடிக் கைகளில் அப்போதே எங்களுக்கு உடன்பாடு இல்லை!

மற்றபடி வசதிக்கேற்ப தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்பவர்களைப் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை.

அசின் இலங்கைக்குப்போய் ஈழ மக்களை சந்தித்ததை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''ஐ.நா சபை பிரதிநிதிகளையே விரட்டி அடிக்கும் ராஜபக்ஷே அரசு, அசினுக்கு மட்டும் ஏன் வெற்றிலை பாக்கு வைக்கிறது? அசின் என்ன ஐ.நா-வையே மிஞ்சியதேவலோக தூதரா? நம்முடைய கைகளாலேயே நம் கண்ணைக் குத்தும் வேலையை அசின் மூலமாக கனகச்சிதமாக அரங்கேற்றுகிறது சிங்கள அரசு.

அசின் விவகாரத்தில் ஆயிரம் அரசியல் இருக்கிறது. சூர்யா உள்ளிட்ட நடிகர்களையும் ஈழ மக்கள் பார்க்க விரும்புவதாகச் சொல்லி, ஆள் பிடிக்கும் வேலையையும் அசின் செய்யத் தொடங்கி இருக்கிறார். அவரை அழகுப் பதுமையாக ஆராதிக்கும் தமிழக மக்கள் இதில் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளவேண்டும்!''

சீமானை மீட்கும் முயற்சிகளில் உங்களைப்போன்ற திரை உலகத்தினர் ஈடுபடுவார்களா?

''யாரும் செய்ய மாட்டார்கள். இது சீமானுக்கும் தெரியும். சீமானின் தற்போதைய நடவடிக்கைகளை ஆதரிக்க இங்கே இருக்கும் உணர்வாளர்கள் தயாராக இல்லை. சீமானுடன் சிறையில் இருந்து அவருடைய மனவோட்டத்தை அறிந்தவனாகச் சொல்கிறேன்... சிறை ஒருபோதும் அவருடைய உணர்வைச் சிதைக்காது!''

லட்சக்கணக்கான மக்கள் முள்வேலிக்குள் முடக்கப் பட்டு இருக்கும் நிலையில், அவர்களின் மீட்சிக்காக சினிமா துறையினர் இனி எத்தகைய முயற்சிகளையும் எடுக்க மாட்டார்களா?

''பாக்கு தொடங்கி கோக் விளம்பரம் வரைக்கும் சினிமா தாண்டியும் நட்சத்திரங்கள் பிஸியாக இருப்பதற்கென்று ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. இருப்பினும், அவர்கள் போராட வந்துபோதுகூட, 'த்ரிஷாவோட டிரஸ்ஸை பார்த்தியா? விஜய்யோட ஷ¨வை பார்த்தியா?' என அப்போதும் நடிகர் களாகவே வேடிக்கை பார்த்தவர்கள்தானே நாம்? காவிரி பிரச்னை தொடங்கி,ஈழப் பிரச்னை வரைக்கும் ரஜினியையும் கமலையும் தொங்கித் தொங்கியே நாம் தோற்றுப்போனது போதும்! ஒவ்வொரு தமிழனும் உண்மையான உணர்வோடு வீதிக்கு வந்தால், நம் பின்னால் ரஜினியும் கமலும் கண்டிப்பாக நிற்பார்கள். தவிர்க்க முடியாத அந்தக் கட்டாயமே அவர்களை நம் பின்னால் அணி வகுக்கச் செய்யும்.

இந்த நேரத்தில் என் ஒரே கோரிக்கை... தயவு செய்து சினிமாவில் தலைவர்களைத் தேடும் வேலையை இனியும் செய்யாதீர்கள். காரணம், அதற்கான தகுதி இங்கே யாருக்கும் இல்லை!''

நன்றி- தட்ஸ் தமிழ் 

திங்கள், 12 ஜூலை, 2010

விடாது செம்மொழி!

மழை விட்டும் தூவானம் விடாதகுறையாக, செம்மொழி மாநாடு முடிந்தபிறகும் இன்னமும் அது தொடர்பான சர்ச்சைகளிலும் சாகசங்களிலும்தான் தமிழக அரசியல் சுழன்றாடிக் கொண்டிருக்கிறது. ‘கருணாநிதி போர்க் குற்றவாளி’ என்று ஜெயலலிதா கொதிக்க, ‘ஈழப்பிரச்னைக்காக பதவியை ராஜினாமா செய்தவன் நான்’ என ஃபிளாஷ்பேக் நினைவுகளில் மூழ்கினார் முதல்வர் கருணாநிதி. இதற்கிடையே செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்களுக்கு செயல்வடிவம் கொடுக்க தமிழக அரசு சில முடிவுகளையும் எடுத்திருக்கிறது. இதற்கான கூட்டத்தில் முதல் வேலையாக முதல்வரைப் பாராட்டி தீர்மானம் போட்டுவிட்டுத்தான் அடுத்த தீர்மானங்கள் பற்றியே யோசிக்க ஆரம்பித்தார்கள்.

பொருட்காட்சி மைதானத்தில் தொலைந்த குழந்தை போல, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழி தொலைந்து போய் விட்டிருந்தது. பழம்பெருமை பேசியே நிகழ்காலச் சிக்கல்களை மறக்கடித்துவிடும் சாமர்த்தியம் அரசியல்வாதிகளுக்கு கைவந்த கலை! அப்படி தமிழர்களின் பழம்பெருமைகளை சுட்டிக்காட்டும் ‘இனியவை நாற்பது’ ஊர்வலமும், கண்காட்சி அரங்கும் தமிழர்களை பரவசப்பட வைத்து, ஈழச் சிக்கல்களை மறக்கச் செய்தது. வாலியும் வைரமுத்துவும் நா.முத்துகுமாரும் செம்மொழி நாயகனைப் புகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில், இலங்கையில் முக்கியமான பல சம்பவங்கள் நடந்தேறின. ஈழ மண்ணில் நிகழ்ந்த இறுதிக்கட்டப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபை ஒரு குழுவை நியமித்தது. ‘ஐ.நா. அமைப்பு இப்படி ஒரு குழுவை நியமித்தது சட்டவிரோதமானது. எங்கள் நிர்வாகத்தில் குறுக்கிட அவர்கள் யார்? இந்தக் குழுவில் இருக்கும் யாருக்கும் விசா தரமாட்டோம்’ என்று கொதித்தது இலங்கை அரசு. ஐ.நா. அமைப்பை கண்டித்து ராஜபக்ஷே கட்சியின் சார்பில் இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் நடக்க, ஒரு அமைச்சர் இன்னும் ஒரு படி மேலே போய் ‘கொழும்பில் இருக்கும் ஐ.நா. அலுவலகத்தைத் தாக்குவதில் தவறில்லை’ என்றுகூட பேசினார்.
‘இலங்கை பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பது நுடுல்ஸ் தயாரிப்பது போல சில நிமிட வேலை கிடையாது. அதற்கென நாங்கள் எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வோம்’ என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளிப்படையாகவே சொன்னார். இந்நிலையில், செம்மொழி மாநாட்டின் சாரலாக, இலங்கை பிரச்னைக்காக மீண்டும் ஒருமுறை பிரதமருக்குக் கடிதம் எழுதப் போவதாக அறிவித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி. செம்மொழி மாநாட்டு அழைப்பிதழைக்கூட முதல்வர் சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கொடுத்துவிட்டு வந்தார். செம்மொழி மாநாட்டு அழைப்பிதழ் முக்கியம்; இலங்கைத் தமிழர் பிரச்னை தொடர்பான கடிதம் சாதாரணமானதா?

மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் முக்கியமானவை; தமிழின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துச் சொல்லும் புதிதான ஆய்வுகள், நவீன காலத்துக்கு ஏற்றவகையில் தமிழில் செய்யவேண்டிய மாற்றங்கள், பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு வரவேண்டியவை என்னென்ன?, கணினி பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் தமிழுக்கு என்ன செய்யவேண்டும்... இப்படியான முடிவுகளை எடுக்க அடிகோலும் ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் முக்கிய இடம்பிடிக்க வேண்டும். 380 கோடி செலவிடப்பட்ட செம்மொழி மாநாட்டில் எண்ணூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் படிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஆய்வரங்குகளில் கூட்டமே இல்லை. படித்த கட்டுரைகள் மீது என்ன முடிவு எடுக்கப்பட்டது? ஒன்றுமில்லை!
தமிழின் சிறந்த நூல்களை பிறமொழிகளில் மொழிபெயர்க்கவும், பிறமொழி நூல்களை தமிழில் கொண்டுவரவும் ஒரு வல்லுநர் குழுவை அமைக்க முடிவு செய்திருப்பதும், யூனிகோட் எழுத்துரு பயன்பாடு தொடர்பாக தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையும், தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை தருவதாக வெளியாகி இருக்கும் அறிவிப்புமே இந்த மாநாட்டால் நடந்த உருப்படியான விஷயங்கள். ஆனாலும், தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை தர நினைக்கும் இந்த அரசு, தமிழில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருப்படியாக உருவாக்கி வைத்திருக்கிறதா என்பதை மனசாட்சியோடு யோசிக்க வேண்டியிருக்கிறது. பொறியியல், மருத்துவம் போன்ற உயர்கல்விகளை தமிழில் படிக்க வேண்டும் என்றால் அதற்கான புத்தகங்களே இல்லை; தரமான புத்தகங்களை மொழிபெயர்க்க இதுவரை நடந்த எந்த முயற்சிக்கும் அரசின் ஆதரவு இல்லை. பள்ளி பாடப் புத்தகங்கள் தமிழில் இருந்தாலும், சகல வசதிகளும் அரசு பள்ளிகளில் இருந்தாலும், தனியார் பள்ளிகளோடு போட்டியிட்டு மாணவர்களுக்கு நம்பிக்கை தருகிற ஒரு சூழ்நிலை அந்தப் பள்ளிகளில் இல்லை என்பதை யாராவது மறுக்கமுடியுமா? தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு ‘தரமான கல்வியைத்தான் பெறுகிறோம்’ என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
மரபணுப்பூங்கா, செம்மொழிப் பூங்கா என கட்டிடங்களும் நினைவுச் சின்னங்களும் தமிழை வளர்த்துவிடாது. உலகெங்கும் இருக்கும் தமிழர்களுக்கு நிம்மதியான வாழ்க்கை வேண்டும்; கட்சி வேறுபாடுகளைக் கடந்து தமிழகத் தலைவர்கள் அதற்கான ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும். முல்லைபெரியாறு அணைக்காக பிரதமரைச் சந்திக்க கேரளத்து காங்கிரஸ் எம்.பி.க்களும் கம்யூனிஸ்ட் எம்.பி.க்களும் ஒன்றாகக் கரம்கோர்த்து செல்வார்கள். தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் அப்படிச் செல்வதை யாராவது கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியுமா?

உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள், தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் கற்றுத்தர விரும்பினாலும் அதற்கு எளிய எழுத்துப் பயிற்சிகளைக் கொண்ட முழுமையான புத்தகங்கள் கிடைப்பதில்லை; தமிழின் தாய்பூமியான இங்கு அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். இன்னும் படிக்கப்பட்டாத கல்வெட்டுகளிலும், இடிந்துகிடக்கும் ஏராளமான கோயில்களிலும் தமிழகத்தின் & தமிழனின் வரலாறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறது.அழிவிலிருந்து அதை மீட்க வேண்டும்.

உண்மையில் இதையெல்லாம் செய்வதற்கு செம்மொழி மாநாட்டுக்கு ஆன செலவைவிட அதிகம் ஆகிவிடாது; தேவை, நிஜமான அக்கறை மட்டுமே!

நன்றி : தெனாலி

வெள்ளி, 18 ஜூன், 2010

ராவணன் - விமர்சனம்



சுரண்டல் மயமான அதிகார வர்க்கத்துக்கும் மக்களின் எதிர்ப்புணர்வுக்கும் இடையே நடக்கும் மோதலில் சிக்கும் ஒரு பெண்ணின் கதை என்று மணி ரத்னத்தின் ராவணன் கதையைச் சுருக்கலாம்.


திருநெல்வேலியை அடுத்துள்ள வனப் பகுதியில் வசிக்கும் மக்களின் தலைவன் வீரா என்கிற வீரய்யா (விக்ரம்). அந்தப் பகுதியிலும் சுற்றியுள்ள இடங்களிலும் மக்களின் காவலன். போலீஸால் தேடப்படும் குற்றவாளி. இவனைப் பிடிக்க அல்லது கொல்ல முயலும் தேவ் (பிருத்விராஜ்) தலைமையிலான போலீஸ் இவனது தங்கையை (பிரியாமணி) சூறையாடுகிறது. ஆத்திரம் கொண்ட வீரா, தேவின் மனைவி ராகினியை (ஐஸ்வர்யா) கடத்துகிறான். ராகினியைத் தேடவும் வீராவைக் கொல்லவும் தேவ் பெரிய படையுடன் களம் இறங்குகிறான். காட்டில் ராஜாங்கம் நடத்தும் வீராவை அவனால் நெருங்க முடிந்ததா என்பது படத்தின் ஆதாரமான கேள்வி. கடத்தப்பட்ட ராகினிக்கும் கடத்திய வீராவுக்கும் இடையே நடைபெறும் ரசாயன மாற்றங்கள் கதையின் திருப்பம். ஆபத்திலிருந்து மீண்டு வரும் மனைவியை தேவ் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டானா, வீரா - தேவ் மோதலில் வெல்வது யார், ராகினியின் நிலை என்ன ஆகிய கேள்விகளுக்கு கிளைமாக்ஸ் விடை சொல்கிறது.

அதிரப்பள்ளி அருவியின் பேரிரைச்சலையும் பீதியூட்டும் நீரின் பாய்ச்சலையும் பின்னணியாகக் கொண்டு தொடங்கும் படம் நேரத்தை வீணடிக்காமல் கதையின் ஆதார முடிச்சுக்குள் போய்விடுகிறது. எடுத்த எடுப்பிலேயே கடத்தல், சட்டென்று சலனம் கொள்ளும் வீராவின் மனம் என்று திருப்பங்கள் அருவியின் சுழல்போலக் கதையை உருமாற்றுகின்றன. தேடுதல் வேட்டையும் காதல் ஏக்கமுமாக நகரும் படம் தொய்வின்றி முன்னேறுகிறது. இயக்குநர் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் கதை, சம்பவங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றைப் பார்வையாளர்களோடு உறவாட விடுகிறார். சுஹாசினியின் வசனங்கள் கூர்மையாக இருக்கின்றன (உங்க பொம்பளைங்க மட்டும் மரகதம், எங்க பொம்பளைங்க மட்டும் கல்லா...). ஆனால் மணி ரத்னம் முக்கியமான பல காட்சிகளை வசனத்தின் உதவியின்றிக் காட்சிப்படுத்தலிலேயே வலுவாகக் கொண்டுவந்துவிடுகிறார்.
 
வீரா, ராகினி அளவுக்கு தேவ் உள்ளிட்ட மற்ற பாத்திரங்கள் அழுத்தமாகச் சித்தரிக்கப்படவில்லை. தவிர, வீராவின் போராட்டத்திற்கான பின்னணியை, அவன் மக்கள் தலைவனாக வளர்ந்த விதத்தை வலுவாகச் சித்தரிக்கத் தவறிவிட்டார் இயக்குநர். வீராவின் பின்னணி தேவின் குரலில் சொல்லப்பட்டுக் கவன ஈர்ப்பின்றிக் கடந்து போகிறது. தேடுதல் வேட்டையில் ஈடுபடும் காவல் துறையின் அட்டூழியங்களைக் காட்டுவதிலும் இதே தயக்கம் வெளிப்படுகிறது. திரைக்கதையின் வலுவை இது குறைக்கிறது. எடுத்துக்கொண்ட கதையின் தாக்கத்தை இன்னும் அழுத்தமாக பதியச் செய்யாமல் அந்தத் தயக்கம் தடுக்கிறது. கிளைமாக்ஸ் பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.


ஐஸ்வர்யா இன்னமும் 50 கேஜி தாஜ்மஹால். அழகால் திரையை ஆளுகிறார். அழகும் கம்பீரமும் நளினமும் இணைந்த ஐஸ்வர்யா ராய் கண்களில் வியாபித்து நிற்கிறார். விக்ரம், பிரபு, கார்த்திக், பிருத்விராஜ் போன்ற திறமையான நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார் ஐஸ்வர்யா. அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காயாகவும் பணயப் பொருளாகவும் மாற்றப்படுவது குறித்த வேதனையையும் கோபத்தையும் அபாரமாக வெளிப்படுத்துகிறார். தன்னைக் கடத்தி வந்தவன் மீதான கோபம் மெல்ல மெல்லக் கரையும் மாற்றத்தை நுட்பமாக வெளிப்படுத்துகிறார். மலை ஏறுவது, அருவியில் குதிப்பது, பள்ளத்திலிருந்து விழுதைப் பிடித்துக்கொண்டு ஏறுவது என்று உடல் பலம் சார்ந்த காட்சிகளிலும் கிறங்கடிக்கிறார். பிளாஷ்பேக்காக வரும் ரொமாண்டிக் காட்சிகளில் கவர்ச்சியும் நளினமும் கலந்து வசீகரிக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் முனைப்புக்கு ஒரு சலாம் போடலாம்.

முரட்டு உடம்போடு மிரட்டுகிறார் விக்ரம். கண்களில் கோபமும் முறுக்கேறியிருக்கும் நரம்புகளில் ஆவேசமும் தெறிக்கும் காட்டுத் தலைவன் வேடத்தில் விக்ரம் தனி ராஜ்ஜியம் நடத்துகிறார். ஆவேசமாகச் சீறுவது, தங்கை சீரழிக்கப்படும்போது குமுறுவது, கடத்தி வந்த பெண்ணின் மீது ஈர்ப்பு ஏற்படும்போது அதைக் கையாளத் தெரியாமல் குழம்புவது, உணர்வுகளைக் கொட்டிப் பேசுவது என்று பட்டையைக் கிளப்புகிறார். போலீஸ், அரசாங்கம் ஆகியவற்றைப் பற்றிய கோபம், தங்கை குறித்த துக்கம், தான் விரும்பாமலேயே தனக்குள் வந்து ஒட்டிக்கொண்ட காதல் ஆகியவற்றை முக பாவங்களாலும் உடல் மொழியாலும் வெளிப்படுத்தும் நுட்பம் குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாகத் தண்ணீரில் விழுந்து கிடக்கும் ராகினியைப் பார்க்கும்போது வீராவின் மனசுக்குள் ஏற்படும் சஞ்சலம் கண்களில் சிறு மாற்றமாக வெளிப்படும் இடம் அற்புதம்.

வேட்டையாடும் போலீஸ் வேடத்துக்கேற்ற முக பாவங்களுடனும் உடல் மொழியுடனும் பிருத்விராஜ், தன் வேலையை ஒழுங்காகச் செய்கிறார். ஐஸ்வர்யாவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் ஜோடிப்பொருத்தம் கொஞ்சம் மிஸ்ஸிங். கார்த்திக், பிரபு, முன்னா ஆகியோர் துணைப் பாத்திரங்களாக வந்து தங்கள் வேலையை ஒழுங்காகச் செய்கிறார்கள். குறிப்பாக அனுமனை நினைவுறுத்தும் பாத்திரத்தில் கார்த்திக்கின் சேட்டைகள் ரசிக்கவைக்கின்றன. இரண்டு காட்சிகளில் வந்தாலும் பிரியாமணி அழுத்தமான முத்திரை பதிக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை அவர் சொல்லும் காட்சி மனதைத் தொடுகிறது. ரஞ்சிதாவுக்கு இந்தப் படத்தில் என்ன வேலை என்று தெரியவில்லை.
 
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும், இசையப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் படத்தின் மற்ற இரண்டு ஹீரோக்கள். அருவியின் அழகு, ஆவேசம், காட்டின் வசீகரம், அபாயம் ஆகியவற்றைக் கச்சிதமாகப் படம்பிடித்துத் தந்திருக்கிறது சந்தோஷ் சிவனின் கேமரா. ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும்போதெல்லாம் கேமிராவுக்குத் தனி உற்சாகம் வந்துவிடுகிறது. ஐஸ் மரக்கிளைகளில் விழுந்து கிடக்கும் காட்சியும் நீரிலிருந்து எழும் அவரது முகமும் தேர்ந்த சித்திரக் காட்சிகளாக மனத்தில் நிற்கின்றன. ஒவ்வொரு பிரேமையும் கவனித்து இழைத்திருக்கிறார் சிவன். கள்வரே, காட்டுச் சிறுக்கி, உசுரே போகுதே பாடல்களில் வைரமுத்துவின் வரிகளில் இளமை பொங்குகிறது.


ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் எல்லாப் பாடல்களும் ஏற்கனவே ஹிட் ஆகிவிட்டன. படத்தோடு சேர்ந்து ஒலிக்கும்போது அவற்றின் மீதான மதிப்பு கூடுகிறது. குறிப்பாக உசுரே போகுது பாடல். இந்தப் பாடலும் காட்டுச் சிறுக்கி பாடலும் படமாக்கப்பட்ட விதம் அருமை. பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கிறது.

அதிகார வர்க்கத்துக்கும் காட்டில் வசிக்கும் மக்களுக்கும் இடையேயான பிரச்னையைக் களமாகக் கொண்ட படம் ராவணன். இந்தக் களத்தை அழுத்தமான சித்திரமாகத் தீட்டிக் காட்ட அதிகம் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவருடைய கதையும், கதையின் பாத்திரங்களும் இயக்குநரின் உழைப்பைச் பளிச்சென்று சொல்கின்றன.


மணிரத்தினத்தின் ராவணா வசிகரீக்கிறான்.
 
- நன்றி : தெனாலி

ஞாயிறு, 13 ஜூன், 2010

புரட்சியின் மறுபெயர் "சே"

 
புரட்சியின் அடையாளம் சே குவேரா , வாழ்நாள் முழுவதும் அமெரிக்காவின் திமிர்த்தனத்தை எதிர்த்து நின்ற மாவீரன்.

இடதுசாரிக் கொள்கைகள் கொண்ட குடும்பத்தில் பிறந்த சே,சிறு வயதிலிருந்தே அநீதியை கண்டு ஆத்திரம் கொள்பவராக இருந்தார்.பணக்காரக் குடும்பத்தில் பிறந்து ஏழைகளின் தோழனாக இருந்தவர்.

அமெரிக்க முழுவதும் மேற்கொண்ட மோட்டார் சைக்கிள் பயணம் சே- வின் வாழ்கையை திசை மாற்றியது .முதலாளித்துவம் மக்களை எவ்வளவு கொடூரமாக பிழிந்தெடுக்கிறது என்பதை கண்கூடாகப் பார்த்தார்.இனி புரட்சி மட்டும்தான் ஒரே வழி என முடிவெடுத்தார்.

முதலாளித்துவ அமெரிக்காவின் கீழ் இருந்த கியூபாவின் பிடல் காஸ்ட்ரோ உடனான அறிமுகம் இதை சாத்தியப்படுத்தும் என நம்பினார் "சே".
 

அர்ஜென்டீனாவில் பிறந்த சே கியூபா பரட்சி வெற்றி பெற களம் இறங்கினார், அமெரிக்கா ஸ்தம்பித்தது, காஸ்ட்ரோ குவேராவை தன் நம்பிக்கையான தளபதியாக கருதினார்.மக்கள் சக்தி கியூபா வில் வெற்றி பெற்றது,சே விற்கு அமைச்சர் பதவி வழங்கினார் காஸ்ட்ரோ.

கொஞ்ச காலத்தில் அமைச்சர் பதவியை துறந்து காங்கோவின் விடுதலைக்கு போராட ஆப்ரிக்காவிற்கு சென்றார் ,அங்கிருந்து பொலீவிய நாட்டு விடுதலைக்காக போராடினார்.

சே வை விடாமல் துரத்தியது அமெரிக்க சி ஐ எ , கொரில்லா வீரர்களுடன் கடும் போர் ஏற்பட்டது,அங்குதான் சே சுட்டுக் கொள்ளப் பட்டார் .கலங்கினார் காஸ்ட்ரோ தன் ஒரு கையை இழந்தது போல் துடித்தார்,இன்று வரை அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து நின்று கொண்டிருக்கிறார் காஸ்ட்ரோ.
 

"அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழுந்தால் நீயும் நானும் தோழனே " - சே குவேரா

இன்று சே வின் பேத்தியான லிடியா குவேராவும் ஒரு புரட்சிக்காரர் தான்,பசுமையை நோக்கி புரட்சி செய்கிறார் இந்த பெண் குவேரா
புரட்சி தொடரும்................

புதன், 5 மே, 2010

உறையவைக்கும் உலக உதாரணங்கள்

பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.



பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.

அமெரிக்காவில் ஒரு பெரிய நகரத்தில் வேலை செய்த இந்தியச் செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவாளியாக இருந்தார். பிளவுபடாத பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்த அவர், தன்னை பாகிஸ்தானி என்றே சக நிருபர்களிடம் கூறி வருவார். இந்திய அமைச்சர்கள் இங்கு வரும்போது சென்சிட்டிவ்வான கேள்விகளுக்குப் பதில் பெற்று அந்த டேப்பை அப்படியே அருகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சேர்ப்பித்துவிடுவார். அவர் இறக்கும் வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. காரணம், அரசியல் பிரஷர்தான். இவருக்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அனைவரும் நல்ல நண்பர்கள்!'' என்று முடித்தனர்.

'தாய் மண்ணே வணக்கம்' என்று நல்ல நாட்டுப் பற்றுடன் இருப்பவர்களை சரியாக அலசித் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்புவதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!

- சூரியன்

திங்கள், 3 மே, 2010

ஹமாம் சோப்பும் ஒரு கூடை அழுக்கும்

நீண்ட காலத்துக்கு பிறகு இந்த பதிவு. உடல் அழுக்கை நீக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஹமாம் சோப்பு தயாரிப்பாளர்களின் உள்ள அழுக்கை பற்றியது.

தலித் முரசின் சமீபத்திய இதழில் ஊடகங்கள் பற்றி மிக சிறப்பான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. மீனா மயில் எழுதியிருக்கிறார். ஒரு ஊடகவியலாளர் என்ற முறையில் கட்டுரையை படிக்க ஆரம்பித்த போதே எனக்கு பலத்த அதிர்ச்சி. அதில் அவர் ஹமாம் சோப் விளம்பரம் பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த கட்டுரையின் ஹமாம் சோப்பு பகுதியை மட்டும் இங்கு குறிப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன்.


தற்பொழுது வெளிவந்து கொண்டிருக்கும் ஹமாம் சோப் விளம்பரக் எத்தனை பேரின் பார்வையை எட்டியது, கவனத்தை ஈர்த்தது, சுரணையை கிளறியது என்று தெரியவில்லை. ஒரு பார்ப்பன குடும்பம் அது. சிறுமியின் கைகளில் தடிப்பு தடிப்பாக சொறி வந்துவிட, இது எதனால் இருக்கும் என்று சிறுமியின் தாய் யோசிக்கிறார். ஆளாளுக்கு ஒரு காரணத்தை ஊகிக்கிறார்கள். வீட்டின் பணிப்பெண், “தெரு நாயோட விளையாடினா சொறி வரத்தான் செய்யும்” என்கிறார். கேரம் விலையாடிககொண்டிருக்கும் மாமனாரும் மாமியாரும் ஆளுக்கு ஒரு காரணத்தை சொல்கிறார்கள். “ஹமாம் இருக்க வீட்ல இந்த சந்தேகம் எல்லாம் எங்க” என்று முடிகிறது விளம்பரம். இதில் அந்த மாமனார் சொல்லும் காரணம்தான் அப்பட்டமான சாதிய வக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. கேரம் காயினை அடித்தபடி அவர் இப்படி சொல்கிறார்: “ஆட்டோவில் அந்த குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே, அதான்.” இதை சொல்லும் போது அவர் கண்களிலும் உடல் மொழியிலும்வெளிப்படும் வன்மம் ஆண்டாண்டு காலமாக பார்ப்பனர்களிடம் நாம் பார்த்ததுதான்.”

இப்படி நீள்கிறது அந்த கட்டுரை. என்னுடைய அதிர்ச்சிக்கு காரணம், அந்த விளம்பரம் மட்டும் அல்ல எனது சுரணையும்தான். அந்த விளம்பரம் தொடர்ந்து பல்வேறு தொலைகாட்சிகள் மூலம் எனது பார்வையை எட்டியிருந்தாலும், எனது கவனத்தை ஈர்க்கவில்லை. எனது சுரணையை கிளறவில்லை. அதை இங்கே வெட்கத்தினுடேயே பதிவு செய்கிறேன். அந்த விளம்பரத்தில் அந்த மனிதர் சொல்வது ‘கண்ட குழந்தைகளையா அல்லது அந்த குழந்தைகளையா’ என்பதை தெளிவுப்படுத்திக் கொள்ள மீண்டும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். கண்ட குழந்தைகள் என்று சொன்னாலும் அது அப்பட்டமான சாதி வெறியே. ஆனால் அவர் ஒரு படி மேலே போய் மிகத் தெளிவாக அந்த குழந்தைகள் என்று தான் சொல்கிறார். மீனா மயில் எழுதியிருப்பது போல அருவருப்பாகத்தான் இருக்கிறது.

ஒரு சோப் விளம்பரத்தில் இவ்வளவு அப்பட்டமான சாதிய வெறியும் உள்ள அழுக்கும் வெளிப்படுமா என்பது ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.. தொடர்ந்து சிகப்பழகு கிறீம்களின் எல்லா விளம்பரங்களும் பெண்களையும் பொதுவாக கருப்பாக இருக்கும் மக்களையும் கூனிக் குறுக செய்வது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட விளம்பரங்களையும் பொருட்களையும் நாம் புறக்கணிக்காத வரையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிட போவதில்லை. எப்போதும் பனியன் அணிந்த பகட்டான தோற்றம் கொண்ட மேல்சாதி பிரதிநிதி யாராவது நமக்கு விருப்பமில்லாவிட்டாலும் நமது வீடுகளுக்கு வந்து தலித் மற்றும் பிற ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான கருத்துகளை உதிர்த்துக் கொண்டுதான் இருக்க போகிறார்கள். நாம் என்ன செய்ய போகிறோம்?

http://neerottam.wordpress.com/

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

நளினி சிறுகச் சிறுகச் சித்ரவதை!

ராஜீவ் கொலையை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால், அதைக் காரணம் காட்டி நளினியை சிறுகச் சிறுகக் கொலை செய்வது நியாயமாகாது. வாழும் நீதிமான்களில் மிக மூத்தவரான வி.ஆர்.கிருஷ்ணய்யர், 'ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்த காலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு' என்று தனது தீர்ப்புகளில் அடிக்கடி குறிப்பிடுவார். நீதியரசர்கள் சொல்வதைவிட 'கூட்டணி தர்மங்கள்'தான் இங்கு எல்லாப் பிரச்னைகளையும் தீர்மானிக்கின்றன. எனவேதான், வீட்டுக்கும் வர முடியாமல் சிறையிலும் நிம்மதியாக இருக்க முடியாமல் அந்தரத்தில் அல்லாடுகிறது நளினியின் வாழ்க்கை!

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி, 91-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில், உடலில் வெடிகுண்டு தாங்கிய தனு என்ற பெண்ணால் கொலை செய்யப்பட்டார். கைதான 26 பேருக்கும் பூந்தமல்லி தடா நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த மேல்முறையீட்டில் 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை உறுதியானது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. பின்னர், நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. 'ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தானே. அதன் பிறகும் என்னை விடுதலை செய்ய மறுப்பது ஏன்?' என்று நளினி கேள்வி எழுப்புகிறார். நளினியை விடுவிக்க முடியாது என்று சிறை ஆலோசனைக் குழு சொன்னதை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இன்றைய சிக்கலுக்குக் காரணம் இதுதான்!

''அன்னை சோனியா காட்டிய கருணையால்தான் நளினியின் தூக்குத் தண்டனையே ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதை மீண்டும் மீண்டும் கிளப்புவது நளினிக்கு அனுதாபம் தேடும் முயற்சியே. ராஜீவ் கொலையை நாங்கள் மறக்கவும் மன்னிக்கவும் முடியாது'' என்று சொல்லும் காங்கிரஸ் பேச்சாளர் கோபண்ணா, ''சட்டம் தன் கடமையைச் செய்வதற்கு அதன் போக்கிலேயே விட வேண்டுமே தவிர, இதைப் பிரசாரமாக்கக் கூடாது'' என்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி. லட்சுமிநாராயணனிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால், 14 ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது சரியானது. ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு இருக்குமானால், ஆயுள் முழுக்கச் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இது இன்று இருக்கும் சட்ட யதார்த்தம். நளினி தன்னுடைய தரப்பு வாதங்களை உச்ச நீதிமன்றத்தில்வைத்து அவர்களது பரிசீலனைக்கு தனது வழக்கைக் கொண்டுபோகலாம்'' என்று சொல்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி-யான வைகுந்தும் இவரது கருத்தையே வழிமொழிகிறார். ''ஆயுள் தண்டனை என்றால் 14 ஆண்டுகள்தான் இருக்க வேண்டும் என்று கறாரான வரையறை இல்லை. ஆயுள் தண்டனை என்பதன் அர்த்தம் ஆயுள் முழுக்கத் தண்டனையை அனுபவிப்பதுதான். நளினியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு முக்கியக் குற்றவாளியாக இருப்பதால், இதை உச்ச நீதிமன்றம் விசாரித்து முறையான தீர்ப்பைத் தரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்'' என்கிறார் வைகுந்த்.

'நளினி தொடர்புடைய குற்றம் கொடூரமானது. ராஜீவ் உள்ளிட்ட 18 பேர் கொலை செய்யப்படக் காரணமான சதித் திட்டத்தின் ஓர் அங்கமாக அவர் செயல்பட்டுள்ளார்' என்பதை முக்கியக் காரணமாகச் சொல்லி, நளினியின் முன்விடுதலையை நிராகரித்துள்ளது தமிழக அரசு. 'ராஜீவ் கொலை வழக்கு தடா சட்டத்தின் கீழ் வராது. இந்திய அரசைத் திகைக்கச் செய்வதோ அல்லது இந்திய மக்களிடம் அச்சம் உண்டாக்குவதோ சதிகாரர்களின் நோக்கமாக இருந்தது என்பதை மெய்ப்பிக்க ஆதாரம் இல்லாததால் தடா சட்டப் பிரிவுகள் இதற்குப் பொருந்தாது. சதிகாரர்களில் எவரும் ராஜீவ் காந்தியைத் தவிர, வேறு எந்த இந்தியரின் சாவையும் விரும்பியதற்குச் சான்று ஏதும் இல்லை' என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் வெளிப்படையாகச் சொன்ன பிறகு, அதே காரணத்தைச் சிறை ஆலோசனைக் குழு கூறுவதும் அதைத் தமிழக அரசு ஏற்பதும் வழக்கை மீண்டும் பின்நோக்கிக் கொண்டுசெல்லும் காரியமாகத்தான் இருக்கிறது.

நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி, ''நளினி விடுதலையானால் குடியிருக்கப் போகும் ராயப்பேட்டை பகுதியின் இன்ஸ்பெக்டர் மட்டும்தான் நளினியை உறுதியாக விடுதலை செய்யக் கூடாது என்று சொல்கிறார். அந்தப் பகுதியில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், தலைவர்களின் வீடுகள், அமெரிக்கத் தூதரகம் இருக்கின்றன. அதனால் சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும் என்கிறார். நளினியின் அம்மாவும் தம்பியும் அந்தப் பகுதியில்தான் 12 ஆண்டுகளாக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு இருப்பதே யாருக்கும் தெரியாத மாதிரி அமைதியாகத்தான் காலத்தைக் கழிக்கிறார்கள். இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, கொலை வழக்கு குற்றவாளிகள் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று இருக்கிறது. முன் விடுதலை செய்யும்போது சிறை ஆலோசனைக் குழு, சம்பந்தப்பட்டவர் சிறையில் ஒழுங்காக இருந்தாரா, இவரை வெளியில் விடுவதால் இவரது உயிருக்கு ஆபத்து அல்லது இவரால் மற்றவர் உயிருக்கு ஆபத்து உண்டா, விடுதலை ஆகும் நபரை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்கிறார்களா என்பதைத்தான் பார்ப்பார்கள். இறந்து போனவர் யார் என்பது முன் விடுதலைக்கான தகுதி ஆகாது'' என்கிறார் புகழேந்தி.

மனித உரிமையாளர் 'எவிடென்ஸ்' கதிர், ''நடந்திருப்பது கொடூரமான குற்றம் என்று சொல்லி முன்விடுதலைக்கு மறுக்கிறார்கள். எது கொடூரம் என்பதற்கு என்ன வரையறை? மேலவளவு படுகொலைகள், லீலாவதி கொலை, தா.கிருஷ்ணன் கொலை போன்றவை கொடூரமான குற்றங்களா... இல்லையா? அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் இதுபோல் அடக்கப்பட்டார்களா? அரசாங்கத்தின் கொள்கைகள், நீதிமன்றத்தின் போக்குகள், தீர்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால், நடைமுறையில் அப்படி இல்லை. நளினியை விடுவிக்காமல் இருக்க அரசியல் காரணம் ஒன்றே ஒன்றுதான். ஆனால், விடுவிக்கச் சொல்ல மனிதாபிமானக் காரணங்கள் ஏராளம் இருக்கின்றன'' என்கிறார் 'எவிடென்ஸ்' கதிர்.

வி.ஆர்.கிருஷ்ணய்யர் எழுதியதுதான் மீண்டும் நினைவுக்கு வருகிறது. 'நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப் பொழுதிலும், மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது!'

நளினி மகள்!

நளினி - முருகன் தம்பதியருக்கு ஒரே மகள். பெயர் மேகரா. அரித்ரா என்றும் அழைக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்படும்போது கர்ப்பமாக இருந்தார் நளினி. வேலூர் மகளிர் சிறையில்தான் பிறந்தார் மேகரா. சில ஆண்டுகள் மட்டும் அம்மாவுடன் சிறையில் இருந்த மேகரா, முருகனின் அம்மாவுடன் இலங்கை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே இருந்து சில ஆண்டுகள் கழித்து தமிழகம் வந்து நளினியைச் சந்தித்தார். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்ததால், தொடர்ந்து இங்கு தங்குவதற்குத் தடை ஏற்பட்டது. எனவே, முருகனின் சகோதரர் தன்னுடன் ஸ்காட்லாண்டு அழைத்துச் சென்றுவிட்டார். இன்று அங்குதான் ப்ளஸ் டூ படித்து வருகிறார்.

நான்கு ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து நளினியைப் பார்க்க அவர் முயற்சிக்க, விசா அனுமதி கிடைக்கவில்லை. இலங்கையில் யுத்தம் நடந்துகொண்டு இருப்பதைக் காரணமாகக் காட்டி, அனுமதி மறுக்கப்பட்டதாம். ''என்னுடைய அம்மா நிரபராதி. அவர் என்னை அருகில் இருந்து படிக்கவைக்க வேண்டும், வளர்க்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், அது நடக்கவில்லை. அவரது கனவை நிறைவேற்றும் வகையில் படித்து வருகிறேன். அவர் விரைவில் வெளியில் வந்து எனக்கு ஆசி வழங்குவார்'' என்று தனது உறவினர்களிடம் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறாராம் மேகரா!

ஆனந்த விகடன் / 14-04-2010