புதன், 4 நவம்பர், 2009

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்.

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை.

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

- நன்றி : குழலி பக்கங்கள் .

கருத்துகள் இல்லை: