வெள்ளி, 11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

நன்றி : காலம்

கருத்துகள் இல்லை: